சிங்கப்பூர் அருகே மலேசிய நாட்டு கடற்படை கப்பல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியது.
மலேசிய கடற்படைக்கு சொந்தமான கே.டி. பென்டேகர் என்ற கப்பல் ஸ்வீடனில் தயாரிக்கப்பட்டு 1978ம் ஆண்டு கடற்படைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கடற்படையில் இணைக்கப்பட்ட இந்த கப்பல், 45 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கே.டி. பென்டேகர் கப்பல், தென்ஜூங் பெனுயுசிப் பகுதியில் இருந்து 2 கடல்மைல் தொலைவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கடலுக்கடியில் ஏதோ ஒரு மர்ம பொருள் இடித்ததில் சேதம் அடைந்து நீர் உள்ளே புக ஆரம்பித்தது.
உடனடியாக, இது குறித்து கடற்படை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட, மீட்புக் குழுவினர் கப்பலுக்கு பயணமாகினர். கப்பலில் சேதம் அடைந்த பகுதியை சீரமைக்க அவர்கள் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் முயற்சி தோல்வியில் முடிய, கப்பல் மெல்ல, மெல்ல மூழ்க ஆரம்பித்தது.
இதையடுத்து, கப்பலில் இருந்த 39 சிப்பந்திகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 4 மணி நேரத்தில் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதேனும் ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கடற்படை கேட்டுக்கொண்டுள்ளது. கப்பல் கடலில் மூழ்கியதால் உயிரிழப்பு எதுவுமில்லை; யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.